×

சிவகங்கை பாஜ வேட்பாளர், தலைவராக இருக்கும் மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மாயம்; முதலீட்டாளர்கள் பீதி

சென்னை: சிவகங்கை பாஜ வேட்பாளர் தேவநாதன் யாதவ், தலைவராக இருக்கும், மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடியை காணவில்லை என்றும், அதில் முதலீடு செய்தவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜகவில் 10 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக நாஞ்சில் சம்பத் சமீபத்தில் குற்றம்சாட்டினார். அதற்கு ஏற்றார்போல தமிழகத்தில் 261 ரவுடிகள் மீது பல கொலை, கொள்ளை, வழிப்பறி என்று 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய பலர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவருமே பாஜகவில் சேர்ந்து பொறுப்புகளை பெற்றுள்ளனர். அதேபோல, மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், ரூ.20 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டியதாக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவ்வாறு பாஜகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அக்கட்சியினர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்தநிலையில், நாட்டின் பழமையான நிதி நிறுவனங்களில் மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் கிளைகள் பல இடங்களில் உள்ளது. இந்த சூழ்நிலையில், மயிலாப்பூர் மாட வீதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர் கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வைப்புத்தொகை மீதான வட்டிகள் தாமதமாகவும், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள் பகுதி, பகுதியாகவும் வழங்கப்படுவதாக குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை வைத்துள்ளனர். மொத்தமாக ரூ.525 கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். இந்தநிலையில் இந்த நிதி நிறுவனத்தில் மத்திய சென்னையில் உள்ள ஒரு அலுவலகம் கடந்த ஆண்டு மூடப்பட்டது.

இதன் காரணமாக பீதியடைந்த வாடிகையாளர்கள் மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்தில் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக தொடர்ந்து கூடி வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்ப கேட்டு வருவதால் நிதி நிறுவனத்துக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு செக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் இரண்டு வாரம் கழித்து தேதி குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தினமும், டெபாசிட்தாரர்கள், அலுவலகத்திற்குச் சென்று, பல மணி நேரம் அமர்ந்து, நிவாரணம் கேட்டு வருகின்றனர். பெரும்பாலானவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் பண்ட் ரூ.525 கோடி காணவில்லையாம். டெபாசிட்டர் எல்லாம் பதற்றத்தில் உள்ளார்கள். ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் உள்ளதாம். இதன் தலைவர் யாருன்னா தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள தேவநாதன் யாதவ் என்பவர் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து மதிப்பாக ரூ.206 கோடியை காட்டியுள்ளார். தமிழகத்தில் சொத்து மதிப்பு அதிகமாக காண்பித்துள்ள வேட்பாளர்களில் முதல் இடத்தை ஈரோடு தொகுதி வேட்பாளரும், இரண்டாவது இடத்தை தேவநாதன் யாதவும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் தேவநாதன் யாதவ் மீது பணம் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, ‘மயிலாப்பூரில் ஒரு நிதி நிறுவனம் ரூ.500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு டெபாசிட் செய்தவர்கள், நடுத்தெருவில் நிற்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டவர் பாஜக வேட்பாளராக உள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்’ என்றார்.

The post சிவகங்கை பாஜ வேட்பாளர், தலைவராக இருக்கும் மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மாயம்; முதலீட்டாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Mylapore Hindu Finance Corporation ,Sivagangai ,BJP ,CHENNAI ,Congress ,Anand Srinivasan ,Devanathan Yadav ,Mylapur Hindu Finance Corporation ,Mylapur Hindu ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்