×

தாமரைக்கு வாக்களித்து என்னை எம்.பி., ஆக்கினால் தென் சென்னையை வளர்ச்சி அடைந்த நாடாளுமன்ற தொகுதியாக மாற்றுவேன்; தமிழிசை சவுந்திரராஜன் உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். ‘அக்கா தமிழிசை வந்திருக்கிறேன்’ என்ற அவரது அதிரடி பிரசாரம் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சாதாரணமாக அவர் மக்கள் மத்தியில் பேசி பழகி வருவதும், அவர்களின் வீடுகளுக்கே சென்று பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைப்பதாக கூறி வாக்குறுதி அளித்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தமிழிசை சவுந்திரராஜனுக்கு பெற்று தந்துள்ளது. தென்சென்னை வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தெருக்களின் வளர்ச்சிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி தாமரை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டி வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை தந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரூர் குப்பம், கக்கன் காலனி, தாமோதரபுரம், சாஸ்திரி நகர், 3வது அவென்யூ, இந்திரா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். தாமரைக்கு வாக்களித்தால் மட்டுமே தென் சென்னையை வளர்ச்சி அடைந்த நாடாளுமன்ற தொகுதியாக மாற்ற முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்ல மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் பல திட்டங்களை வைத்திருக்கிறேன்.

அதை செயல்படுத்தும் போது தெரியும், எப்படிப்பட்ட எம்பி நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்று மக்களே சொல்லும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கும். ஏனென்றால், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நான் பணியாற்றிய போது, பல நல்ல மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வருவதற்கும் பல நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தையும் புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். இதை தென்சென்னை மக்கள் புரிந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள். ஆகையால் புதுச்சேரிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததைப் போல தென் சென்னைக்கும் பல நல்ல திட்டங்களை கொண்டு வர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தாமரைக்கு வாக்களித்து என்னை எம்.பி., ஆக்கினால் தென் சென்னையை வளர்ச்சி அடைந்த நாடாளுமன்ற தொகுதியாக மாற்றுவேன்; தமிழிசை சவுந்திரராஜன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamarai ,South Chennai ,Tamilisai Soundrarajan ,Chennai ,BJP ,National Constituency ,Akka Tamilisai Vandichum ,Tamilisai ,Soundrarajan ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...