×

வத்தலக்குண்டுவில் இரு முதியவர்கள் சடலம் பூட்டிய வீட்டிற்குள் மீட்பு

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோவில் தெருவை சேர்ந்தவர் சூரிய நாராயணன் (79). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி வசந்தா. இவர், கடந்த 2ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இறுதிச் சடங்கு முடிந்தபின் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். இதனால் சூரிய நாராயணன், அவரது அண்ணன் சுந்தரராமன் (81) ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து வத்தலக்குண்டு காவல்நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் அந்த வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து விட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஒரு அறையில் சூரிய நாராயணன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். மற்றொரு அறையில் அவரது அண்ணன் சுந்தரராமன் இறந்து கிடந்தார்.

இருவரது உடல்களையும் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.துதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இருவரும், இனி தங்களைப் பார்க்க யாரும் இல்லையே எனக் கவலைப்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வெளியூரிலுள்ள உறவினர்கள் வந்த பிறகுதான் முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர். பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வத்தலக்குண்டுவில் இரு முதியவர்கள் சடலம் பூட்டிய வீட்டிற்குள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Vathalakundu ,Suriya Narayanan ,Temple Street, Vathalakundu, Dindigul district ,Vasantha ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி