×

ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்துவதையும் அதனை விற்பனை செய்துவருவதையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், ஓட்டேரி பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் விரைந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில், ஓட்டேரி மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது.
அவர்களை காவல்நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தி, அவர்களிடம் இருந்து 21 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இதுசம்பந்தமாக ஓட்டேரி ஐதர் கார்டன் 3வது தெருவை சேர்ந்த ஜினேஸ்வரன் (21), ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். ஜினேஸ்வரன் அடையாறில் உள்ள மருந்து குடோனில் டிரைவராக உள்ளார். அவர் வலிநிவாரணி மாத்திரைகளை கொண்டுவந்து ராஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவனிடம் கொடுத்து விற்பனை செய்துவந்ததும் இவர்கள் அதனை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜினேஷ்வரன், ராஜ்குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Otteri ,Perambur ,Basinbridge ,Pulianthoppu ,Chennai ,
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...