×

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.840 உயர்வு; சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. சவரன் 53 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தையும், 29ம் தேதி சவரன் 51 ஆயிரத்தையும் கடந்தது. ஏப்ரல் 1ம் தேதி சவரன் ரூ.51,560 ஆக உயர்ந்தது. 2ம் தேதி சற்று குறைந்து ரூ.51,440க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 4ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்தது. இது இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.180 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்கப்பட்டது. இது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுபடியும் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை மேலும், மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தங்கம் விலை ஒரே நாளில் ரூ.840 உயர்வு; சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...