×

தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் நிறைவு

ஊட்டி : கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்தது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.

குறிப்பாக, விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் போது பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளே அதிகம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை காலமான மே மாதத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

5 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். இதில், பல வகையான, பல வண்ணங்களை கொண்ட மலர்கள் பூத்து காணப்படும். இதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகளில் மலர்கள் பூத்து காணப்படும்.

இந்த மலர் தொட்டிகள் பூங்காவில் உள்ள மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்று நடவு செய்யும் பணிகள் துவங்கி நடந்து வந்தது. மூன்று மாதங்களாக நடந்து வந்த நாற்று நடவு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

தற்போது மலர் செடிகள் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மலர் நாற்றுக்களில் மொட்டுக்களும் காணப்படுகிறது. இம்மாதம் 15ம் தேதிக்கு மேல் இந்த மலர் செடிகளில் பல வகையான மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தல் மற்றும் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்த பின் கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள பல வகையான மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.

The post தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Government ,Botanical Garden ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...