×

பைக் நிறுத்தும் தகராறில் 8 இருசக்கர வாகனம், ஆட்டோவை நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தை இங்கே விடாதீர்கள் தள்ளி நிறுத்த சொன்னதால் எட்டு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோவை அடித்து உடைத்த வாலிபர்கள் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவில் வசித்து வருபவர் அமுல்ராஜ் (20). இவர் கொளத்தூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இவரை பார்க்க இவரது நண்பர் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, இவரது வீட்டில் இருந்து 2 வீடுகள் தள்ளி உள்ள வீட்டில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெரியவர், இருசக்கர வாகனத்தை இங்கே விடாதீர்கள் என கூறியுள்ளார். அங்கிருந்து சென்ற சுரேஷ், சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் தனது நண்பர்கள் 8 பேருடன் அங்கு வந்து அந்தத் தெருவில் இருந்த 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவை கத்தியை கொண்டு அடித்து உடைத்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர். அப்போது, அமுல்ராஜ் என்பவர் வீட்டிற்கு வந்த அவரது நண்பர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து நேற்று அமுல்ராஜ் (20), மணிபாரதி (21), சுரேஷ் (எ) சத்தியா (21), விகாஷ் (21) சாந்தகுமார் (23), பிரகாஷ் (19)ஆகிய 6 பேரை பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்தனர். இதில், கைது செய்யப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் கொளத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும், போதையில் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பேசின் பரிட்ஜ் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக் நிறுத்தும் தகராறில் 8 இருசக்கர வாகனம், ஆட்டோவை நொறுக்கிய கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Pulyantoppu ,Sundarapuram 4th Street, Pulianthoppu ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது