×

இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல் என்பதே இல்லாத நாடாக இந்தியா மாறிவிடும்: சீமான் பேச்சு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொறியாளர் ஜெகதீஷ் சுந்தர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திறந்த வெளியில் பேசுவதற்காகவும் ஆங்காங்கே கட்சி கொடிகள் அமைத்து பாடல்களுடன் தயார் நிலையில் இருந்தனர். சீமான் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கூட்டம் இல்லாததால் தனியார் விடுதியில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து மாலை 5 மணி அளவில் பஜார் வீதிக்கு பிரசாரம் செய்ய வந்தார்.

அங்கு அவர் வந்து பேச தொடங்கியதும் கூட்டம் குறைவாக, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே இருந்ததால் முகம் சுழித்தவாறு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமராக மோடி தேர்வாகிய பின்னர் இரவோடு இரவாக ரூ.1000 செல்லாது என அறிவித்து மக்களை ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அளவுக்கு தள்ளிவிட்டது பாஜ அரசு. தன்னை பிரதமராக தேர்வு செய்ய பின்பு சுஸ் பேங்கில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து நாட்டையே கெடுத்துவிட்டார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டு வந்ததால் இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி சென்றது. அதேபோல் சுப்பிரமணிய சுவாமி கூறுவது போல் மோடிக்கும் – நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் இருந்தது நிர்மலா சீதாராமன் ரூ.500 கோடி, ஆயிரம் கோடி வழங்கியதாக பொய் சொல்கிறார்.

பாஜவில் உள்ள தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருமே பைத்தியக்காரர்களாக உள்ளனர் என பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கியது குறித்த கேள்விக்கு இதிலிருந்து தெரிகிறது, பாஜ அரசு, ஒரு சர்வாதிகா அரசு என்பது. பாஜ இன்னொரு முறை ஜெயித்து வந்தால் தேர்தல் என்பதையே மறந்து விட வேண்டியதுதான். தேர்தல் இல்லாத சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவிடும் என்றார். தொகுதி பிரசனைகள் குறித்த கேள்விக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியில் என்னென்ன பிரச்னைகள் என்பதை காட்டிலும் நாடு தமிழகம் முழுவதும் உள்ள பிரச்னைகளை சரி செய்வோம் என பேசினார்.

The post இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல் என்பதே இல்லாத நாடாக இந்தியா மாறிவிடும்: சீமான் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,Seeman ,Kummidipoondi ,Engineer ,Jagadish Sundar ,Thiruvallur Parliament ,Naam Tamilar Party ,Kummidipoondi Bazaar Road ,
× RELATED சொல்லிட்டாங்க…