×

வாக்காளர்களுக்கு பணம், பரிசு விநியோகம் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலியில் புகார் அளிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்கள். மேலும் பொதுமக்களும் தங்களின் பார்வைக்கு வரும் விதிமீறல்களை, புகாராக தெரிய படுத்த தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்தலாம். அதன்படி, வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க ‘சி-விஜில்’ எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த செயலியை (c -VIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், செல்போன் எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவது தங்களுக்கு தெரிய வந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் செல்போன் எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ’சி – விஜில்’ செயலி இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே உள்ளது. இம்மொழிகள் தெரியாதவர்கள் இச்செயலியை பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது. நேர்மையாக தேர்தலை அணுக விரும்புவோர் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் இந்த ‘சி- விஜில்’ செயலியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாக்காளர்களுக்கு பணம், பரிசு விநியோகம் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலியில் புகார் அளிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Election Commission ,Dinakaran ,
× RELATED எனது வீட்டில்கூட சிசிடிவி...