×

பெண்களுக்கான உரிமைகளை மோடியிடம் எதிர்பார்க்க முடியாது; பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே வாழக்கூடிய ஒருவர் அண்ணாமலை தான்: வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்

கேள்வி: பழங்குடியினத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர், பாஜவால் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறாரே?

பதில்: சூத்திரர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டோம் என்று சொல்லி அந்த பாசிச பணியா கூட்டம் தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் எண்ணங்களில் ஆழ படிந்து இருக்கும் சுய சார்ந்த எண்ணங்கள் தான், தற்போது உள்ள குடியரசு தலைவர் அவமதிக்கப்படுவதற்கு காரணம். கோயிலுக்கு செல்லும் ஜனாதிபதியை வெளியே நிறுத்துவதும், அவரை நாடாளுமன்ற தொடக்க விழா, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. அதற்கு காரணம், தாங்கள் தான் கடவுளின் மறு உருவம் என்ற சாதிய வர்க்கம் கொண்ட ஒரு கூட்டம் தான் பாஜ கூட்டம். அவர்கள் தான் இந்தியாவையும் ஆளுகிறார்கள். அவர்கள் பார்வையில் இந்தியாவின் முதல் குடிமகனாகவே இருந்தாலும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவரை அவமதிப்பது தான் அவர்கள் சித்தாந்தம்.

கேள்வி: பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?

பதில்: மக்களின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் எள்ளளவும் மதிப்பளிக்காத, மிருகத்தன்மையுடன் நடந்து கொள்ளும் செயலைத் தான் மோடி போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். இது, அமித்ஷா உள்ளிட்ட குஜராத் கும்பல்களின் மனதில் வேரூன்றி கிடக்கிறது. அப்படிப்பட்டவர்கள் இருக்கின்ற மாநிலங்களில் இது தான் நடக்கும். அங்கு பெண்களுக்கான முக்கியத்துவம், சம வாய்ப்பு, உரிமைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அவர்களிடத்தில் பெண்களுக்கான எந்த உரிமையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இது அவர்கள் ரத்தத்தில் ஊறப்பட்ட கருத்தியல்.

கேள்வி: மணிப்பூர் கலவரத்தை பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க மறுப்பது ஏன்?

பதில்: பாஜவை பொறுத்தவரை ராமரை வழிபடக்கூடியவர்கள் மட்டும் தான் மனிதர்கள். அதிலும் குறிப்பாக ராமரை வழிபடும் சூத்திரர்கள் அவர்களுக்கு நிகரான மனிதர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மணிப்பூரில் மக்கள் படும் கஷ்டமும், அந்தப் பெண்கள் சீரழிக்கப்படுவது பற்றியும் எந்த கவலையும் இல்லை. அவர் தான் நாட்டின் பிரதமராக இருக்கிறார். மணிப்பூர் விஷயத்தில் அவர் கையாண்ட விதத்தை, இந்திய நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை. இந்திய நாடு எத்தனையோ நாடாளுமன்றங்களை பார்த்திருக்கிறது. ஆனால் மோடி தலைமையில் கடந்த 2 முறை நடக்கும் இந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

கேள்வி: ஐபிஎஸ் படித்த அண்ணாமலையின் பேச்சு ஒரே பொய்யாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றி?

பதில்: அண்ணாமலை பேசக்கூடிய அனைத்துமே உண்மைக்கு புறம்பானது தான். வரலாற்றை முழுமையாக படிக்காமல், அவர் கூறுவது தான் வரலாறு என ஊடகங்களை மிரட்டி அதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடம் பொய்யான கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே வாழக்கூடிய ஒருவர் என தமிழ்நாட்டு மக்களால் விமர்சிக்கக் கூடிய ஒருவராக அவரது பேச்சு தொடர்கிறது.

The post பெண்களுக்கான உரிமைகளை மோடியிடம் எதிர்பார்க்க முடியாது; பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே வாழக்கூடிய ஒருவர் அண்ணாமலை தான்: வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Annamalai ,Velmurugan ,Tamil Nadu Life Rights Party ,BJP ,India ,Shudras ,Tamil Nadu Right to Life Party ,President ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...