×

வனத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

*வனத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க, வனத்தில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெறுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்கு, யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, கடமான் உள்ளிட்ட பல்வேறு அதிகம் உள்ளன. இங்குள்ள டாப்சிலிப், கவியருவி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆங்காங்கே உலாவரும் விலங்குகளை கண்டு செல்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்தது, இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடிக்கொடிகள் செழித்தோங்கி பச்சைப்பசலென காணப்பட்டது. பல மாதமாக வனப்பகுதி செழிப்பால், சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை கண்டு ரசித்து சென்றனர்.அதன்பின், இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து, வனத்தில் தீ அபாயம் ஏற்படும் என்பதால் தீ தடுப்பு கோடுகளை வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் டாப்சிலிப் வன பகுதியில் மட்டும் மாலை நேரங்களில் ஓரளவு குளிரின் தாக்கம் இருந்தாலும். மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தான் அதிகளவில் உள்ளது.மழையில்லாததால், பொள்ளாச்சி வனச்சகரத்திற்குட்பட்ட சர்க்கார்பதி, தம்பம்பதி, போத்தமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள் தண்ணீர் மிகவும் குறைவானது. எப்போதும் தொடர்ந்து தண்ணீர் அதிகளவு செல்லும் ஆழியார் அருகே உள்ள நவமலை நீரோடையில், தற்போது தண்ணீர் மிகவும் குறைந்து பெரும்பகுதி பாறைகள் வெளியே தெரிகிறது. வனப்பகுதியில் உள்ள சிற்றாறு மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வற்றியுள்ளதால், அடர்ந்த காட்டில் உலா வரும், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குள் கடந்த சில வாரமாக இரை தேடியும் தண்ணீரை தேடியும் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க வனத்துறை மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரங்களில், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் நிரப்ப ஏற்கனவே அமைக்கப்பட்ட பெரிய அளவிலான தொட்டிகளை சுத்தம் செய்து, அதில் கடந்த சில நாட்களாக தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை நிரப்பி, விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொட்டிகளில் தண்ணீர் குறையை குறைய அதில் மீண்டும் தண்ணீர் நிரப்பி சேகரித்து வைக்கப்படும். இதன் மூலம், வன விலங்குகள் இடம் பெயர்வது குறையும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வனத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு விலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Pollachi ,Anaimalai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...