×

ஜனாதிபதியை அவமதிக்கும் ஒரே கட்சி பாஜ-அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேச்சு

கோவை : கோவை மாநகர் மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு சார்பில், இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகுடபதி, ஆதி திராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சி, மதவாத கட்சி, ஜாதி வெறி பிடித்த கட்சி. வடநாட்டில் மாட்டுக்கறி தின்றால் ஜெயிலில் போட்டு விடுவார்கள். நம் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பேருக்குத்தான் ஜனாதிபதி. அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மரியாதை கிடைப்பது இல்லை. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் மரியாதை இல்லை. ஜனாதிபதி கோவிலுக்கு வந்து, சென்றவுடன், கோவிலில், தண்ணீர் விட்டு கழுவினார்கள். அதுதான், பாரதிய ஜனதா.

ஆனால், திமுகவில் எல்லா சமூகத்தினருக்கும் சமமான மரியாதை கிடைக்கும். நான் ஒரு அருந்ததியின சமூகத்தை சேர்ந்தவன். எனக்கு, திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள். இதுதான் திமுக. அருந்ததியின சமூக மக்கள் படித்து முன்வர முடியாது. மற்றவர்கள் பிடுங்கிக்கொள்வார்கள். கிறார்கள். அதனால், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, அருந்ததியின சமூகத்திற்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவந்தார். இதை, வரவேற்று கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தினோம். அவருடைய சாதனையை வரவேற்று, தமிழகம் முழுவதும் பேசினோம். அவர், அன்று செய்த முயற்சியால் இன்று நம் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் வரை உயர்ந்துள்ளனர். இன்னும் பலர், பல அரசு உயர் பதவிகளில் இருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் அருந்ததியின சமூக மக்கள் அதிகம்பேர் அரசு வேலைவாய்ப்பில் உள்ளனர்.

திமுக எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தலிலும், அது பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, அதில் திமுகவின் ஆதி திராவிடர் நலக்குழு பங்கு பெரிய அளவில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் நாம் 68 சதவீதம் வாக்கு அளித்தோம். இந்த தேர்தலில் அதைவிட அதிகமாக வாக்கு அளிக்க வேண்டும். நமக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தந்த கலைஞரை ஒருநாளும் மறக்க கூடாது.

கலைஞர் வழியில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைக்கிறார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசினார். கூட்டத்தில், அமைப்பாளர் டெம்போ சிவா, அறங்காவலர் குழு உறுப்பினர் தனபால், நிர்வாகிகள் வடகோவை ஜார்ஜ், சாமிநாதன், துணை அமைப்பாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரரன், ராஜன், சரவணன், கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ஜனாதிபதியை அவமதிக்கும் ஒரே கட்சி பாஜ-அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Andyur Selvaraj ,Coimbatore ,Coimbatore District DMK Adi Dravidar Welfare Committee ,district DMK ,Crosscut Road, Coimbatore ,Metropolitan District DMK ,Na. Karthik ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...