×

குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால் அதன் அடிப்படையில் பதிந்த வழக்கை ED விசாரிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை : சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைப் ஸ்பேஷஸ் நிறுவனத்தை எஸ்.கே.பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கினர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் இருந்து தமக்கு சேர வேண்டிய பங்கை பீட்டர் தர மறுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்.கே.பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிந்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு பீட்டருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது தவறு. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “நிறுவனத்திற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆகவே அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை தொடர முடியாது.,”எனத் தெரிவித்தார். அமலாக்கத்துறை தரப்பில், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, “எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ” உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது, எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்கிறோம். சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுகிறோம், “இவ்வாறு ஆணையிட்டனர்.

The post குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால் அதன் அடிப்படையில் பதிந்த வழக்கை ED விசாரிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : ED ,iCourt ,Chennai ,Enforcement Department ,Ocean Life Spaces ,S. K. Peter ,Sriram ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள்...