×

₹2.55 கோடி உண்டியல் காணிக்கை எண்ணிக்கை 265 கிராம் தங்கம், 2.32 கிலோ வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஏப்.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை நேற்று நடந்தது. அதில், ₹2.55 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது, கோயில் உண்டியலில் ₹2 கோடியே 55 லட்சத்து 2 ஆயிரத்து 820ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 265 கிராம் தங்கம், 2.32 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பங்குனி மாத மாதத்தில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள், பவுர்ணமி கிரிவலத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அதோடு, அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது தரிசனம், கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. எனவே, உண்டியல் காணிக்கை இந்த மாதமும் வழக்கம் போல ₹2 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ₹2.55 கோடி உண்டியல் காணிக்கை எண்ணிக்கை 265 கிராம் தங்கம், 2.32 கிலோ வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar ,Temple ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...