×

ஒரு நாளைக்கு 10 பொய் சொல்வது ஜெயக்குமாருக்கு வாடிக்கை: அமைச்சர் சேகர்பாபு சுளீர்

சென்னை: ஒரு நாளைக்கு 10 பொய்களை சொல்வது ஜெயக்குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஓட்டேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

மக்களுடைய தேவைகளை அறிந்து கல்வி, சுகாதாரம், பொது கட்டமைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீரான கழிவுநீர், தரமான சாலைகள், தடையில்லா மின்சாரம் போன்றவற்றை உருவாக்குவதற்கு வடசென்னை வளர்ச்சி திட்டம் தொலைநோக்கு திட்டமாக இருந்தது. இன்றைக்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 14ம் தேதி தங்க சாலையில் ரூ.4,614 கோடிக்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

நிச்சயம் தென் சென்னைபோல் வடசென்னை கட்டமைப்பை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். மேயர் சிட்டிபாபு பாலத்தை திறந்து வைத்துள்ளோம். பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த யானைகவுனி பாலம் தற்போது ஒரு வழிப் பாதையாக மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், கணேசபுரம் சப்வே பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக ரூ.160 கோடி செலவில் புதிய மேம்பாலப் பணி நடந்து வருகிறது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை நவீனமயமாக்க ரூ.600 கோடியில் ஒப்பந்தம் போட்டு பணி நடக்கிறது. திமுகவினரால் ஓட்டு கேட்டுச் செல்ல முடியவில்லை என்று ஜெயக்குமார் கூறுகிறார். நாங்கள் வண்டியில் நின்றபடி வேகமாய் சென்று ஓட்டு கேட்கவில்லை. கால்நடையாகச் சென்று நேரடியாக மலர்ந்த முகத்தோடு ஓட்டு கேட்கிறோம். ஒரு நாளைக்கு 10 பொய்களை சொல்வது ஜெயக்குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது. அதில் இந்த பொய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகத்துக்கு வரும்போது திமுகவுக்கு வாக்கு எண்ணிக்கை 2% கூடிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அவரை தயவுசெய்து கேட்டுக் கொள்வது என்னவென்றால், 17ம் தேதி வரை அவர் இங்கேயே தங்கியிருக்கட்டும். அவருடைய செல்வாக்கு என்ன என்பது தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கள் அனைத்துக்கும் புலப்படட்டும். நிச்சயம் இந்த தேர்தலில் பின்னங்கால் பிடறியில் ஓட பாஜவை மக்கள் விரட்டுவார்கள். பிரதமர் வருகை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

The post ஒரு நாளைக்கு 10 பொய் சொல்வது ஜெயக்குமாருக்கு வாடிக்கை: அமைச்சர் சேகர்பாபு சுளீர் appeared first on Dinakaran.

Tags : Jeyakumar ,Minister ,Shekharbabu Suleer ,CHENNAI ,Shekharbabu ,Jayakumar ,West Chennai ,DMK ,Kalanidhi Veerasamy ,Otteri ,PK Shekharbabu ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...