×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்புதலுக்கு விதிகள் வகுக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தங்களை இணைக்க காங்கிரஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை


சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 1950 முதல் 1990 வரை தேர்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். பதிவான வாக்குக்கும், எண்ணப்பட்ட வாக்குக்கும் இடையில் குறைபாடுகள் இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது.  வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை. அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிபுணர்களை வைத்து சோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்க்க முடிவதில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுக தொடர்ந்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்ெபருந்தகை சார்பில் வக்கீல்கள் ஏ.பி.சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்புதலுக்கு விதிகள் வகுக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தங்களை இணைக்க காங்கிரஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Congress ,DMK ,CHENNAI ,Tamil Nadu Congress Committee ,Chennai High Court ,Election Commission ,High ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...