×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி பேச்சு

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 22ம் தேதி திருச்சியில் தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றி வருகிறார். அவரின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ரமாண்டமான பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெறும் என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால், திமுக கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அவர் சென்னையில் வருகிற 17ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேவேளையில் திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, திமுக முன்னணியினரும், கூட்டணி கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திரட்டி வருகிறார். மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறுகிய நாட்களே உள்ளதால் ஒவ்வொரு கட்சிகளின் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை திரட்டி வருகின்றனர். காலை, மாலை என்று அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இணைந்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பியுடன் இணைந்து வருகிற 12ம் தேதி(வெள்ளிக் கிழமை) அன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் எல் அன்ட் டி பை-பாஸ் ரோடில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,India alliance ,M.K.Stalin ,Rahul Gandhi ,Chennai ,Puducherry, Tamil Nadu ,India ,Dinakaran ,
× RELATED ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழக மக்கள்...