×

வீட்டை எழுதி தரும்படி மிரட்டி பெண் மீது சரமாரி தாக்குதல்: வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (35). இவருக்கு திருமணமாகி, ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம், சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் தங்கராஜ் என்பவரிடம், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.2 லட்சம் கடன் வாங்கினேன். பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்கச் சென்றபோது, பணத்தை வாங்க மறுத்து, எனது விட்டை எழுதி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், தினமும் என்னிடம் தகராறு செய்து வந்தார்.

இது தொடர்பாக ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கராஜ், அவரது மனைவி மற்றும் 2 பெண்கள் எனது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து, என்னை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, வீட்டை எழுதி கொடுக்கும்படி மிரட்டி, என்னை சரமாரியாக தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வீட்டை எழுதி தரும்படி மிரட்டி பெண் மீது சரமாரி தாக்குதல்: வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Revathi ,Mukappher ,Joint Commissioner of ,West Zone ,Chennai ,Thangaraj ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்