×

திருவேற்காட்டில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பூந்தமல்லி: திருவேற்காட்டில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி, சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, திருவேற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிந்திக் கல்லூரி முன்பாக நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் கணேசன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ், கல்லூரி முதல்வர் பிரகலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் அப்துல் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என்பதை அனைவரும் அறிய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குகளை பரிசுப் பொருட்களுக்கும், ரொக்கத்துக்கு விற்காமல், வாக்களிப்பது நமது உரிமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு நாளில் மக்கள் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்று வாக்களித்து ஜனநாயகத்தை தழைக்கச் செய்ய வேண்டும். 100 சதவீதம் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, சிலம்பாட்டம், கரகாட்டம், பரத நாட்டியம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பதாகைகள், பேனர்கள் ஆகியவற்றுடன் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், பரப்புரையாளர்கள், களப்பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காட்டில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvekkad ,Poontamalli ,Tamil Nadu ,Tiruvekkath ,
× RELATED திருவேற்காட்டில் கூவம்...