×

பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.5 கோடி தங்க நகைகள் பறிமுதல்

பெரும்புதூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைய உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பெரும்புதூர், பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நிலை கண்காணிப்பு குழு சார்பில் பிரவீன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர்.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கடைக்கு கொண்டு சென்றதும், அங்கு நகைகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள நகைகளை ஆந்திராவில் இருந்து ஒரு வேனில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 2.15 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவற்றை திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் வாசுதேவனிடம் ஒப்படைத்தனர். பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு பைக்கை மறித்து சோதனை செய்தனர். பைக்கில் வந்தவர் ஒரு லாக்கர் கொண்டு வந்தார். அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தன. விசாரணையில் அவர் மணலி சின்னசேக்காட்டைச் சேர்ந்த ராஜாசிங் (35) என்பதும், திருவொற்றியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. ராயபுரம் கிளைக்கு நகைகளை கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையிலான அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

The post பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.5 கோடி தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pattaraiperumbudur Customs ,Perumbudur ,Tamil Nadu ,Election Commission ,Pattara Perumbudur Customs ,Dinakaran ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...