×

வீட்டை எழுதி தரும்படி கேட்டு மிரட்டல்; வீட்டில் இருந்த இளம்பெண்ணை இழுத்து வந்து சரமாரி அடிஉதை: வீடியோ ஆதாரத்துடன் புகார்: தம்பதி 2 பெண்களுக்கு வலை

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(35). இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் நேற்று மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
எனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் தங்கராஜ் என்பவரிடம் ஒரு வருடத்துக்கு முன்பு இரண்டு லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அந்த பணத்தை திருப்பி கொடுக்க சென்றபோது வாங்க மறுத்துவிட்டு எனக்கு சொந்தமாக வீட்டை எழுதி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்தபோது தினமும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கைவில்லை. நேற்று முன்தினம் தங்கராஜ், இவரது மனைவி மற்றும் 2 பெண்கள் சேர்ந்து என்னை சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்துக்கொண்டு வெளியே வந்து செங்கற்களால் தாக்கினர். அத்துடன் தாக்குதல் சம்பந்தமான வீடியோவை இணைத்துள்ளேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து புகாரின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து ரேவதியை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். பாதிக்கப்பட்ட ரேவதி கூறியதாவது; இந்த பிரச்னை கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் கடும் மனஅழுத்தத்தில் இருந்த நான் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். நேற்றுமுன்தினம் எனது வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கினர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

The post வீட்டை எழுதி தரும்படி கேட்டு மிரட்டல்; வீட்டில் இருந்த இளம்பெண்ணை இழுத்து வந்து சரமாரி அடிஉதை: வீடியோ ஆதாரத்துடன் புகார்: தம்பதி 2 பெண்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Revathi ,Mukappher ,Chennai ,West Zone Joint Commissioner ,Thangaraj ,Dinakaran ,
× RELATED கஞ்சா வாங்கி தருவதாக ரூ50 ஆயிரம்...