×

இணையத்தில் மலர்ந்த காதல் 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்

போபால்: இன்றைய உலகில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் ஏராளம். உலகமே இணையத்தில் அடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் தற்போது, இணையத்தின் வாயிலாக வயது வித்தியாசமின்றி காதல் பிறப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. அந்த வகையில் 80 வயது முதியவர் ஒருவருக்கும் 34 வயது பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் அகர் மாவட்டம் மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் பலுராம் பக்கிரி. வயது 80. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் ஷீலா இங்கிள். வயது 34. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதில் உறுதியாகவும் இருந்துள்ளனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலுராம் இணையத்தில் எப்போதும் இருந்து வந்ததால் இந்த காதல் அமைந்ததாக தெரிவித்துள்ளார். இவர்களுடைய காதல் திருமணமும் எல்லைகளை கடந்து சாதித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வயது வித்தியாசத்தை கடந்து நடந்துள்ள இந்த காதல் திருமணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

The post இணையத்தில் மலர்ந்த காதல் 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர் appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Facebook ,WhatsApp ,Instagram ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...