விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கையை வலுப்படுத்துவோம் என பிரச்சாரம் மேற்கொண்டார். விருதுநகரில் தற்போதைய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருமங்கலம் அடுத்த கள்ளுக்குடியில் பரப்புரை மேற்கொண்ட ராதிகா 42 ஆண்டுகளாக மக்களின் ஆதரவு தனக்கு கிடைத்து வருவதாக கூறினார். திடீரென கையை வலுப்படுத்துவோம் என கூறிய ராதிகா அது காங்கிரசின் சின்னம் என்பதை மறந்துவிட்டார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சஜிதானந்தர்த்தனை ஆதரித்து பழனியில் நடிகை ரோகிணி வாக்கு சேகரித்தார். சத்தியா நகரில் மக்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க தெலுங்கிலும் பேசி அவர் வாக்கு கேட்டார். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகர் செந்தில் அவிநாசி அருகே நம்பியம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார்.
தமக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி வாக்கு கேட்ட அவர் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதை ஒன்றிய பாஜக அரசால் மட்டுமே தடுக்க முடியும் என்றார். தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அக்கட்சியின் கலை இலக்கிய பேரவை தலைவரும் நடிகருமான வாகை சந்திர சேகர் ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு சர்வாதிகார ஆட்சி நடைபெறும் என்று கூறினார். ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து முகுளத்தூர் புலிப்படை தலைவர் கருணாஸ் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ராமநாதபுரம், பெருங்குளம், செம்பலையார்குளம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர் ஏணி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து நடிகர் போஸ் ராசிபுரம் அருகே பிரச்சாரம் செய்தார். அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிடுவதாக குறி கொண்டு பின்னர் கொல்லைப்புறம் வழியாக ஒன்று சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடுவார்கள் என அவர் விமர்சித்தார்.
The post கையை வலுப்படுத்தக் கோரிய ராதிகா: காங். சின்னம் கை என்பதை மறந்து பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் appeared first on Dinakaran.