×

திருவள்ளூர் தொகுதியில் பொதுமக்கள் வராததால் பிரசாரம் செய்யாமல் பாதியில் திரும்பிய பாஜ வேட்பாளர்: தேசியக் கொடியை பயன்படுத்தியதால் வழக்கு பதிய கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஏப். 4: பூண்டி ஒன்றியத்தில் பாஜ வேட்பாளர் பிரசாரத்தின்போது மக்கள் கூட்டம் இல்லாததால் வேட்பாளர் அப்செட் ஆனார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பூண்டி ஒன்றியத்தில் உள்ள ராமலிங்காபுரம், பென்னாலூர்பேட்டை, வெலமகண்டிகை, கூனிப்பாளையம், அம்மம்பாக்கம், சீத்தஞ்சேரி, மெய்யூர், வேலகாபுரம், மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம் கச்சூர் ஆகிய பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். சீத்தஞ்சேரி கிராமத்தில் வாக்குசேகரிக்கும் போது வெறும் 5 பேர் 6 பேர் மட்டுமே இருந்தனர். இதனால் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார்.

மேலும் அங்கிருந்து புறப்பட்ட வேட்பாளர் பாலகணபதி வேலகாபுரம், மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம் பகுதிகளுக்கு செல்லும் போது அவரை வரவேற்க கூட்டம் இல்லாமல் ஒருவர், இருவர் மட்டுமே வரவேற்றதால் அப்செட்டாகி விட்டார். அப்பகுதி பாஜ நிர்வாகிகளிடம் இதுதான் நீங்கள் பிரசார பயணத்தை ஏற்பாடு செய்த லட்சணமா என்று கடிந்து கொண்டார். மேலும் பாஜ கூட்டணி கட்சிகளான பாமக, அமமுக, தாமாக கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே வேட்பாளர் உடன் சென்றனர். மற்றபடி கிராமங்களில் வேட்பாளரை வரவேற்க தொண்டர்கள் யாரும் இல்லை, பாஜவினர் மட்டுமே காணப்பட்டனர். மேலும் வேட்பாளரின் வாகனங்களுக்கு முன்னாள் 20 பைக்குகளும், பின்னால் சென்ற 10 கார்களில் இரண்டு கார்களை தவிர மற்ற வாகனங்கள் பாஜ கொடிகளை கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மெய்யூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அங்கு வயதான மூதாட்டிகள் அழைத்து வரப்பட்டு, அவர்கள் கையில் பாஜ கொடியை அளித்திருந்தனர். அப்போது பாஜ கொடியுடன் தேசிய கொடியும் கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்றனர். தேர்தல் பிரசாரத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பது கூட தெரியாமல் பாஜவினர் மூதாட்டியின் கையில் தேசியக் கொடியை கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்றதைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் தேசியக்கொடியை பயன்படுத்தியதற்காக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் தொகுதியில் பொதுமக்கள் வராததால் பிரசாரம் செய்யாமல் பாதியில் திரும்பிய பாஜ வேட்பாளர்: தேசியக் கொடியை பயன்படுத்தியதால் வழக்கு பதிய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvallur ,Uthukottai ,Bundi Union ,Thiruvallur Parliamentary Constituency ,Pon.V. Balaganapathy ,Ramalingapuram ,Bennalurpet ,Velamakandikai ,Thiruvallur ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...