×

அரசு மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாயல்குடி, ஏப்.4: கடலாடி அரசு மருத்துவமனை முன்பு செல்லக் கூடிய சாயல்குடி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும் கூட, தாலுகா தலைமையிட மருத்துவமனைகள் என்பதால் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளை வாங்கவும், விபத்து உள்ளிட்ட அவசரகால மருத்துவ உதவிகளுக்கு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று பல்வேறு வெளியூர்களில் இருந்து மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்களும் பஸ்களில் வந்து செல்கின்றனர். நாள்தோறும் சிலர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. மருத்துவமனை அருகில் போலீஸ் ஸ்டேசன் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன.

இந்நிலையில் மருத்துவமனை முன்பு கடலாடியிலிருந்து சாயல்குடி செல்லும் பிரதான சாலை உள்ளது. மருத்துவமனை வரும் நோயாளிகள், அருகிலுள்ள குடியிருப்பு பகுதி மற்றும் கே.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனை வெளியே உள்ள பஸ் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள், மாணவர்களை பள்ளி வேன்,பஸ்களில் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கை கோடு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு போர்டுடன் கூடிய வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chayalgudi ,Cuddaly Government Hospital ,Cuddalore taluka government ,Dinakaran ,
× RELATED பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து...