திருவொற்றியூர் பகுதியில் பட்டியலில் இருந்து 485 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் உள்ள 400க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2022 கவுன்சிலர் தேர்தலில் சார்லஸ் நகர் பகுதியில் 163, 164 ஆகிய பூத்தில் 911 வாக்காளர்கள் வாக்களித்தனர். தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 163, 164 பூத்தில் 485 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவருமே தற்போது வரை அதே விலாசத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியாததால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த எவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
The post திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் இருந்து 485 பேரின் பெயர் மாயம் appeared first on Dinakaran.