×

தேர்தலில் 200 முதல் 220 சீட் என ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி சென்னையில் மோடி 9ம் தேதி ரோடு ஷோ: 12ம் தேதி கோவை, தருமபுரியில் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு

சென்னை: தோல்வி பயத்தில்எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு பாஜ நெருக்கடி கொடுத்து வருகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கூட ஆம் ஆத்மி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. இப்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.

இதனால் குஜராத்திலேயே கஷ்டப்பட்டுத்தான் வெற்றி பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒடிசாவில் ஆளும் கட்சி பாஜக கூட்டணியை வேண்டாம் என்று கூறிவிட்டது. பஞ்சாப்பிலும் அகாலிதளம் கூட்டணிக்கு வர மறுத்து விட்டது. அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் முற்றிலும் பாஜக புறக்கணிக்கப்பட்டுள்ளதால், 3 மாநிலங்களில் போட்டி போட முடியாத நிலை உருவாகியுள்ளது. தென் மாநிலங்களில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள 134 தொகுதிகளில் 10 சீட் கூட வாங்க முடியாதநிலை தற்போது உருவாகியிருப்பதாக ஒன்றிய உளவுத்துறை கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

மகராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளையே உடைத்துள்ளதால், அக்கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இந்தியா கூட்டணியில் இணைந்து விட்டது. அங்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த முறை பெற்ற சீட்டுகளை விட பாதிதான் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. பாஜக பெரிதும் நம்பும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே பெரும் சரிவை சந்திக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் 200 முதல் 220 சீட்டுகள்தான் அதிகபட்சமாக கிடைக்கும் என்று ஒன்றிய உளவுத்துறை கணிப்பில் தெரியவந்துள்ளது. தென் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதால் அதில் ஒரு 5 சீட்டுகளாவது பெற பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு அடிக்கடி மோடி, அமித்ஷா, ஒன்றிய அமைச்சர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக வருகிற 9ம் தேதி மோடி சென்னை வருகிறார்.

சென்னையில் பனகல் பார்க்கில் இருந்து 3 மணிக்கு வாகனப் பேரணியை மோடி நடத்துகிறார். அங்கிருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அதன்பின்னர் 12ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். கோவை, தருமபுரியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதேபோல அமித்ஷாவும் வருகிற 5ம் தேதி ராமநாதபுரம், மதுரை(தேனி தொகுதி), சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
இவ்வாறு அடிக்கடி அவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் முற்றிலும் கள நிலவரம் பாஜவுக்கு கலவரமாகத்தான் உள்ளது. ஒரு சீட் கூட பாஜவுக்கு கிடைக்காது என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும் எப்படியாவது 5 சீட்டாவது பெற வேண்டும் என்று நினைத்து தமிழகத்திற்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களே தற்போது பாஜவை கை விட்டுள்ள நிலையில் தென் மாநிலங்களில் மட்டும் எப்படி பாஜவுக்கு சீட் கிடைக்கும் என்கின்றனர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

The post தேர்தலில் 200 முதல் 220 சீட் என ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி சென்னையில் மோடி 9ம் தேதி ரோடு ஷோ: 12ம் தேதி கோவை, தருமபுரியில் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Union intelligence ,Modi ,Chennai ,Coimbatore ,Dharmapuri ,BJP ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Punjab ,Ariana ,Rajasthan ,Gujarat ,Union ,Coimbatore, Dharmapuri ,
× RELATED தமிழகத்தில் 3வது இடத்துக்கு...