×

‘ஒரே ஒரு குருக்கள் வர்றார்..’ஒன்லிடென் பீப்பிள்.. நாதக வேட்பாளர் ஆவேசம்

திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் பேரம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மற்ற கட்சியினர் மேளதாளம், ஆரவாரங்களோடு புடைசூழ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரோ ‘ஒரே ஒரு குருக்கள் வர்றார்’ என்ற பாணியில் 10 பேரை மட்டும் வைத்துக்கொண்டு ஆளே இல்லாத பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மைக் பிடித்து பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஆவேசமாக பேச ஆரம்பித்தார்.

அப்போது சுற்றி இருந்த ஒரு சில கடைக்காரர்கள் ‘ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறாய்’ என்ற பாணியில் அவரை வேடிக்கையாக பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சியினர் மட்டும்தான் வெறுப்பான அரசியல் இல்லாமல் நேர்மையான அரசியலை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டை நாங்கள் ஆள வேண்டும் என்பது எங்கள் உரிமை என பேசிக்கொண்டு இருந்தபோது கட்சி நிர்வாகி ஒருவர் குறுக்கிட்டு, ‘போதும்ப்பா… முடிச்சிக்கலாம்..’ என்றார். ஆனால் வேட்பாளரோ, சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன் என மீண்டும் பேசத் தொடங்கினார். பேச்சு மறுபடியும் நீளமாக போகவே, நிர்வாகி மறுபடி குறுக்கிட்டு, ‘முடிச்சுக்கலாம்ப்பா…’ என சொல்லி முடிக்க வைத்தார். அதற்குள் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரில் பாதிப்பேர் கிளம்பிப் போயிருந்தனர்.

The post ‘ஒரே ஒரு குருக்கள் வர்றார்..’ஒன்லிடென் பீப்பிள்.. நாதக வேட்பாளர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Nathaka ,Naam Tamilar Party ,Tiruvallur Parliamentary ,Separate) Constituency ,Jagadish Chander ,Perambakkam ,Pudaisula ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய...