×

3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை போளூரில் பரபரப்பு

போளூர், ஏப்.3: போளூரில் உள்ள முக்கிய 3 நகைக்கடைகள் மற்றும் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள பிரபலமான 3 நகைக்கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் மற்றும் வருமான வரித்துறையினர் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல், நகைக்கடை உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா, நகைக்கடைகளில் வருமான வரி சரியாக கட்டப்பட்டு உள்ளதா, ஏதாவது மறைக்கப்பட்டு உள்ளதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளதா என சோதனை செய்தனர். நேற்று மாலை தொடங்கிய சோதனை இரவும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. முக்கிய நகைக்கடைகள் மற்றும் அவர்களது வீடுகளில் நடந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை போளூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bollur ,Polur ,Election Flying Squad ,Income Tax Department ,Bolur ,Lok Sabha elections ,Tamil Nadu ,Tax ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!