×

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியவாணி நகரில் நேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையின் பிரதான இடங்களில் மழைக் காலங்களில் வெள்ள நீர் விரைந்து வடிந்தது திமுகவின் போர்க்கள பணி காரணமாக தான். வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட வராத பிரதமர் மோடி, இப்போது தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார். திமுக அரசு, பெண்களுக்காக கொடுத்த திட்டங்களை வைத்து பிரசாரம் அமைந்திருக்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளாக எதையும் செய்தாத பிரதமர் மோடியை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழகத்தின் மீதான அவரது திடீர் பாசத்தை அனைவரும் அறிவர். அவரது நாடகம் இங்கு எடுபடாது. இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்புளை கண்டு கொள்ளாமல், தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பது பாஜவின் அரசியல் நாடகம். 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.நகர் முத்துரங்கன் சாலையில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

The post தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Tamilachi Thangapandiyan ,Chennai ,DMK ,Tamilachi Thangapandian ,South Chennai ,Sathyavani Nagar ,Mylapore ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...