×

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

புழல்: புழல் அருகே சாலையின் குறுக்கே இருந்த வயரை கடித்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் ஜெயராமபுரம் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் (45). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கந்தன் மற்றும் சில லோடுமேன்கள் நேற்று முன்தினம் செங்குன்றம் அடுத்த செட்டிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செங்கற்களை இறக்கிவிட்டு மினிலாரியில் சூளைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே மின்மோட்டாருக்குச் செல்லும் வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட கந்தன் மின்வயரை துண்டிக்க நினைத்து வாயால் கடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகள் உடனடியாக கந்தனை புழல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கந்தன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Kandan ,Jayaramapuram Street, Kanniyampalayam ,Panchayat ,Cholavaram ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...