×

பறக்கும் படை சோதனையில் ரூ.2.27 கோடி சிக்கியது

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி சிக்கியது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோயில் அனுமந்தபுரம் சாலை தேரடி வீதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புஷ்பலதா தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.2 கோடியே 26 லட்சத்து 87 ஆயிரத்து 900 பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்ததில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப கொண்டு செல்வதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடியை பறிமுதல் செய்து செங்கல்பட்டு சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post பறக்கும் படை சோதனையில் ரூ.2.27 கோடி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Election Flying Squad ,Singaperumal Temple ,Anumanthapuram Road Theradi road ,Kanchipuram ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!