×

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீடித்து உத்தரவு!

டெல்லி: ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) மார்ச் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (02.04.2024) இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில் உள்ள ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் அமீர் ஆஜரானார்.

ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜாபர் சாதிக், சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்று நிறைவடைந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று (ஏப்.02) ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

 

The post ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீடித்து உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,Delhi ,
× RELATED ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த...