×

தேர்தல் கூட்டத்திற்கு சென்று திரும்பிய அதிமுகவினர் வந்த வேன் பைக் மீது மோதல்; மாணவன் பலி

கலவை: கலவை அருகே நள்ளிரவு அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்று திரும்பிய வேன், பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவன் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கீரம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவா மகன் ஹரிஹரன் (18).

அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சக்திவேல் (19). கலவை அடுத்த கரிக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அருண் மகன் பிரகாஷ் (18). இவர்கள் 3 பேரும் கலவை அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள். நண்பர்களான 3 பேரும் நேற்று கலவையில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றனர்.

பின்னர் இரவு ஒரே பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். கனியந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே சோளிங்கர் பாண்டியநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வந்த வேன் மோதியது. இதில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து கலவை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டனர். இதில் ஹரிஹரனை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சக்திவேல், பிரகாஷை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஹரிஹரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேர்தல் கூட்டத்திற்கு சென்று திரும்பிய அதிமுகவினர் வந்த வேன் பைக் மீது மோதல்; மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Makkah ,Keerambadi ,Makasha ,Ranipet district ,
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை