×

திருவாரூர் – காரைக்குடி இடையே இருமார்க்கத்திலும் இருவேளை ரயில்கள் இயக்க வேண்டும்: வர்த்தகக் கழகம் கோரிக்கை


முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக திருவாரூர் – காரைக்குடி ரயிலை தினசரி காலை மாலை இருபுறமும் இரு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் வர்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வர்த்தகக் கழகம் சார்பில் அதன் பொருளாளர் கிஷோர் தென்னக ரயில்வேத்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையம் சுமார் 125ஆண்டுகள் பழமையான வழித்தடங்களுடன் கூடிய ரயில் நிலையம் ஆகும். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அகலப்பாதை பணிகள், அப்பணிகள் முடிவடைந்த பின்னரும் கேட்கீப்பர்கள் நியமனம் தாமதம் காரணமாக ரயில் சேவையில் தடைபட்டது. பின்னர், ரயிலில் வரும் கேட்கீப்பர் உதவியோடு சோதனை முயற்சியாக டெமு ரயில் இயக்கப்பட்டது.

தொடர்ந்து ரயில் பயணிகள் நல அமைப்புகளின் கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கு பிறகு இத்தடத்தில் இப்போது பல்வேறு பகுதி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதனுடன் திருவாரூர் – காரைக்குடி டெமு சேவையும் தொடர்ந்து வரும் நிலையில் காலை வேளையில் காரைக்குடியிலிருந்து முத்துப்பேட்டை, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை வரையில் மேலும் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும். மீட்டர்கேஜ் காலத்தில் இத்தடத்தில் காலை மாலை நேரத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், அரசு, தனியார் துறை அலுவலர்கள், பணியாளர்கள் என பலரும் பயனடைந்தனர். பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்க முடிந்தது.

ஆனால் இப்போது ஒரேயொரு ரயில் திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி வரையில் சென்றுவிட்டு மாலை திரும்புகிறது. இந்நிலையில், இரு வேளையும் ரயில்கள் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை வரையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும். எனவே, ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து பரிசீலித்து திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் காலை மாலை என இரு வேளையும் இரு பகுதிகளுக்கும் இரண்டு ரயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post திருவாரூர் – காரைக்குடி இடையே இருமார்க்கத்திலும் இருவேளை ரயில்கள் இயக்க வேண்டும்: வர்த்தகக் கழகம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Karaikudi ,Commerce Association ,Muthuppet ,Railway Trade Association ,Muthuppet, Tiruvarur district ,Kishore ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...