×

பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை‌ பூர்த்தி செய்தது திமுக அரசு தான்: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

சென்னை, ஏப்.2: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டை, கந்தன்சாவடி‌ ஆகிய பகுதிகளில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் நேற்று வாக்கு சேகரித்தனர். கல்லுக்குட்டை, கந்தன்சாவடி பகுதியில், கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து, மலர் தூவி, வீர வாள் வழங்கி, வெற்றித் திலகமிட்டு வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்தையும் திமுக அரசு தான் நிறைவேற்றியது. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து கல்லுக்குட்டை பகுதி மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் உங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்தார்கள். திமுக அரசு தான்‌ உங்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கி வருகிறது.

மேலும், உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் புயலினால் இப்பகுதி பாதிக்கப்பட்ட போது உங்களுக்கான‌ நலத்திட்ட உதவிகளை இதே இடத்தில் வந்து தான் நான் வழங்கினேன். ஆகையால், உங்களுடைய துன்ப காலங்களில் உங்களுடன் துணை நின்று உதவியது யார் என்று நினைத்து வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், பகுதிச் செயலாளரும், மண்டலக் குழுத் தலைவருமான ரவிச்சந்திரன், மேற்கு பகுதி வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

திமுகவில் இணைந்த 20 பாமக நிர்வாகிகள்
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று பெருங்குடி 14வது மண்டலத்தில் உள்ள 185, 186 போன்ற வார்டுகளில் உதயசூரியின் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் ஷர்மிளா தேவி, மணிகண்டன் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். உள்ளகரம் பகுதியில், வட்டச் செயலாளர் ஜெ.திவாகர், மாவட்ட பிரதிநிதி வினாயகம் ஆகியோர் பேண்டுவாத்தியம் முழங்க, பட்டாசு வெடித்து வேட்பாளரை வரவேற்றனர்.

புழுதிவாக்கம் பிரதான சாலையில் 186வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் தலைமையில் ஒயிலாட்டம், பேண்டு வாத்தியம் மற்றும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது புழுதிவாக்கம் 186வது வார்டு பாமக தலைவர் கே.பழனி, துணைச் செயலாளர் குமாரசாமி, அமைப்பு செயலாளர் சரவணன் உட்பட 20 பேர் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதில் திமுக நிர்வாகிகள் வட்டச் செயலாளர் குமாரசாமி, ரவீந்திரகுமார், ஜெயக்குமார், சங்கர், அரங்கநாதன், கார்த்திக், ரகு, ராமு, குபேரா, யோகாஜன் ஜவகர், காங்கிரஸ் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பகத்சிங், லோகநாதன் உட்பட பலரும் உடன் சென்றனர்.

The post பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை‌ பூர்த்தி செய்தது திமுக அரசு தான்: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK government ,Perungudi Kallukuttai ,South ,Chennai ,DMK ,Tamilachi Thangapandian ,South Chennai ,Kandanchavadi ,Chozhinganallur Assembly Constituency ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...