×

அதிமுகவை ஏமாற்ற நினைத்தால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கட்சியுடன் பாமக கூட்டணி: வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வேலூர், ஏப்.2: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைத்துள்ள பாமக எங்களை ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவார்கள் என்று வேலூர் அருகே நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். வேலூர் அடுத்த கந்தனேரியில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பசுபதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இங்கு பாஜ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் கடந்த முறை அவர் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கு அதிமுகதான் காரணம் என்று சொல்கிறார். அதிமுகவை பொறுத்தவரை துரோகம் என்ற சொல்லுக்கு இடமில்லை. அதிமுக தொண்டர்கள் விசுவாசமானவர்கள், உழைக்கக்கூடியவர்கள். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, அவரால் செல்வசெழிப்புடன் உள்ளவர் இப்படி கூறுவது சரியில்லை. 2019ல் நாடாளுமன்ற தேர்தல் தள்ளிப்போனது. அத்தேர்தலில் அதிமுக கடுமையாக உழைத்தது. உங்களுக்கு எண்ணம் சரியில்லாததால் வெற்றிவாய்ப்பை இழந்தீர்கள். இங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் நிச்சயம் அதிமுக வெற்றிபெறும். வடமாவட்டங்களின் ஜீவாதாரமான பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே தடுப்பணைகள் கட்டியது போக தற்போது ₹360 கோடியில் பெரிய தடுப்பணை கட்ட உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் பாஜ அரசு துரோகம் இழைத்து வருகிறது. வெள்ள பாதிப்புக்கான நிவாரணமும் தர மறுக்கிறது.

ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்குகிறது. உத்தரபிரதேச மாநிலத்துக்கு ₹10 லட்சம் கோடி வழங்கியுள்ளது. அதேபோல் பீகார் என பல மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிய பாஜ அரசு தமிழகத்துக்கு வளர்ந்த மாநிலம் என்று காரணம் கூறி நிதி தர மறுத்தது. அதனால்தான் பாஜவுடன் கூட்டணி வைக்கவில்லை. இங்கு ஒரு கட்சி (பாமக) ஒவ்வொரு தேர்தலிலும் மாறி, மாறி கூட்டணி வைக்கிறது. நம்முடன் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை வைத்தார்கள். இடஒதுக்கீடு கேட்டார்கள். அதற்கு வழி செய்தேன். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் அரசு உத்தரவு போட்டேன். ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

அதிமுகவை ஏமாற்ற நினைத்தால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள். வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம், புதிய பஸ் நிலையம், பீஞ்சமந்தையில் ஆரம்ப சுகாதார நிலையம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு புதிய தாலுகாக்கள் உருவாக்கம் என பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. ஆகவே அதிமுக வேட்பாளரான பசுபதியை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் வீரமணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, முக்கூர் சுப்பிரமணியம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சு.ரவி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேமுதிக உட்பட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

The post அதிமுகவை ஏமாற்ற நினைத்தால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கட்சியுடன் பாமக கூட்டணி: வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vellore ,general secretary ,Edappadi Palaniswami ,Bamaka ,Kandaneri ,PMK ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...