×

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த , விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர், ஆன்லைன் ரம்மியில் பெருமளவில் பணத்தை இழந்ததாலும், அதற்காக வாங்கியக் கடனை திரும்ப அடைக்க முடியாததாலும் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பொறியாளர் குருராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள நான்காவது உயிர் குருராஜன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இரு முறை சட்டம் இயற்றியும் அதை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 5 மாதங்களாகியும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.

ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் நாள் நீக்கிய நிலையில், அதன் பின் 88 நாட்கள் கழித்து தான் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்பதை உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை. ஆன்ன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில் இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Govt ,Supreme Court ,BAMA ,Anbumani Ramadoss ,CHENNAI ,Tamil Nadu government ,Madras High Court ,president ,BAMAK ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...