×

ஏற்கனவே மருத்துவகல்லூரி இயங்கி வந்த இடத்தில் தாலுகா மருத்துவமனை துவங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் மாவட்ட மருத்தவமனை இயங்கி வந்த இடத்தில் தாலுகா மருத்துவமனை துவங்கிட வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் பழைய தீயணைப்பு நிலையம் மற்றும் நீதிமன்றம் அருகே அரசு மருத்துவமனையானது இயங்கி வந்த நிலையில் கடந்த 1996ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் திருவாரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த மருத்துவமனையானது மாவட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.

அதன்பின்னர், கடந்த 2006, 11 ஆட்சி காலத்தின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் திருவாரூருக்கென அரசு மருத்துவகல்லூரி அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த மருத்துவமனையானது அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இயங்கி வந்தது-. பின்னர் இதற்காக கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு மருத்துவ உபகரணங்களுடன் 2010ம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி மூலம் திறந்துவைக்கப்பட்டதையடுத்து கடந்த 14 ஆண்டு காலமாக அங்கு இயங்கி வருகிறது.

இதனையடுத்து பழைய மருத்துவமனை கட்டிடமானது பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த கட்டிடமானது முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருவதால் சாதாரண காய்ச்சல், தலைவலி போன்ற சிறு நோய்களுக்கு கூட நகரை சுற்றியுள்ள மக்கள் அங்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு நகர் வழியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போதிய அளவில் அரசு பஸ்களோ அல்லது மினி பஸ்களோ இல்லாததால் அவசர தேவைக்கு பேருந்தில் ஏறி, இறங்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்களும் வாடகை ஆட்டோ அல்லது கார்களை நாட வேண்டிய நிலை உள்ளது.

எனவே தஞ்சை போன்ற பிற மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இருந்து வந்தாலும், தலைநகரில் தாலுகா மருத்துவமனை இருந்து வருவதை போன்று அவசர சிகிச்சைக்கும், காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண சிகிச்சைக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்கனவே மருத்துவகல்லூரி மருத்துவமனை இயங்கி வந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தாலுகா மருத்துவமனையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏற்கனவே மருத்துவகல்லூரி இயங்கி வந்த இடத்தில் தாலுகா மருத்துவமனை துவங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Taluka Hospital ,Medical College ,Tiruvarur ,taluk ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...