×

பாஜ நிர்வாகி உட்பட 2 பேர் நகை கடைகளில் ஐடி ரெய்டு குடியாத்தம் பஜாரில் பரபரப்பு வாக்காளர்களுக்கு மூக்குத்தி தயாராவதாக புகார்

குடியாத்தம், மார்ச் 31: குடியாத்தம் பஜார் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க மூக்குத்தி, கொலுசு போன்றவை தயாராவதாக வந்த புகாரின்பேரில் பாஜ நிர்வாகி உட்பட 2 பேரின் நகை கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பஜார் பகுதியில் ஏராளமான அடகு மற்றும் நகை கடைகள் உள்ளன. இதில் தாழையாத்தம் பகுதியை சேர்ந்த முன்னா, சுசில் குமார் ஆகியோரும் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளனர். இவர்களது கடைகளில் தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னா, சுசில்குமார் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாகவும், போலி பில் மூலம் தங்க நகைகளை விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 2 கடைகளில் தங்க நாணயம், கொலுசு, மூக்குத்தி ஆகியவற்றை அரசியல் கட்சியினர் மொத்தமாக ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், நேற்று மாலை 10 பேர் கொண்ட அதிகாரிகள் 2 கடைகளில் திடீரென நுழைந்தனர். தொடர்ந்து கடைகளின் ஷர்ட்டர்களை மூடிவிட்டு சோதனை நடத்த தொடங்கினர். இதில், கடையில் நகைகள் விற்பனை செய்ததற்கான பில், தங்க நகை வாங்கியதற்கான பில் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து பார்வையிட்டு வருகின்றனர். இதனால் பஜார் பகுதி முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் அப்பகுதியில் இருந்த நகை கடைக்காரர்கள் அவசர அவசரமாக கடையை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டனர். தொடர்ந்து 2 கடைகளில் சோதனை நடந்து வரும் நிலையில், சுசில்குமார் பாஜக மாவட்ட விருந்தோம்பல் அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜ நிர்வாகி உட்பட 2 பேர் நகை கடைகளில் ஐடி ரெய்டு குடியாத்தம் பஜாரில் பரபரப்பு வாக்காளர்களுக்கு மூக்குத்தி தயாராவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kudiatham Bazar ,Gudiatham ,Vellore… ,Dinakaran ,
× RELATED ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்