×

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பொது பார்வையாளர் நேரில் ஆய்வு

திருவள்ளூர், மார்ச் 31: நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் வாக்கு பெட்டிகள், அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்படும்.

அவ்வாறு கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கலெக்டர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். அதே நேரத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு காமராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அரசியல் பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருகை குறித்தும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், உதவி செய்ய பொறியாளர் வேலு, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பொது பார்வையாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Separate ,Thiruvallur ,2024 ,Kummidipoondi ,Ponneri ,Madhavaram ,Poontamalli ,Aavadi ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...