×

வேட்பு மனுக்கள் வாபஸ் இல்லை: தேர்தல் களத்தில் 14 பேர்

திருவள்ளூர், மார்ச் 31: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் தனி தொகுதியில் கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்பட 25 வேட்பாளர்கள் 31 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதற்கான வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வேட்பு மனு பரிசீலனையின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த வேட்பு மனு பரிசீலனையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி.பாலகணபதி, தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.தமிழ்மதி உள்பட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. அதே போல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் எஸ்.அசோக் பிரியதர்ஷன், அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் சார்பில் மா.தேவேந்திரன், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் மாலதி என மொத்தம் 8 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.

அதே போல் சுயேட்சையாக சக்திவேல், சிவசங்கரன், பாரதிதாசன், பாலகிருஷ்ணன், மணி, மணிமாறன் என 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் திருவள்ளூர் தனி தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்களி்ன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், மீதமுள்ள 17 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று 30ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கெடு விதிக்கப்பட்ட நிலையில் ஒருவரும் வாபஸ் பெறாததால் திருவள்ளூர் தனி தொகுதியில் 14 பேர் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post வேட்பு மனுக்கள் வாபஸ் இல்லை: தேர்தல் களத்தில் 14 பேர் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Congress ,Bharatiya Janata Party ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...