×

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு உபி முன்னாள் எம்எல்ஏ முக்தாரின் உடல் அடக்கம்: கலெக்டர்-சமாஜ்வாடி எம்பி மோதல்

காசிப்பூர்: உபி முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரபல தாதாவும் 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர் முக்தார் அன்சாரி (63).உபி மாநிலம் பண்டா சிறையில் இருந்த முக்தாருக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு ராணி துர்காவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பினால் அவர் இறந்தார் என கூறப்பட்டது. ஆனால், அவரது உறவினர்கள் உணவில் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினர். அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதையடுத்து அவரது இறப்பு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடப்பட்டது.

முக்தாரின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான காசிப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.நேற்று பலத்த பாதுகாப்புடன் உடல் அடக்கம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் அவருடைய உறவினர்களுக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கலெக்டருக்கும், முக்தாரின் அண்ணன் சமாஜ்வாடியை சேர்ந்த எம்பி அப்சல் அன்சாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே,முக்தாரின் உடலை, 5 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்தது. மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

The post இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு உபி முன்னாள் எம்எல்ஏ முக்தாரின் உடல் அடக்கம்: கலெக்டர்-சமாஜ்வாடி எம்பி மோதல் appeared first on Dinakaran.

Tags : UP MLA ,Mukhtar ,Samajwadi ,Ghazipur ,Mukhtar Ansari ,MLA ,UP ,Banda Jail ,
× RELATED முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி