×

ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செஞ்சீங்க? ஒவ்வொருவரையும் ரூ.1.5 லட்சம் கடனாளி ஆக்கியது பாஜ அரசு: பிரியங்கா விளாசல்

புதுடெல்லி: ‘கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒன்றிய பாஜ அரசு ஒவ்வொரு இந்தியரையும் ரூ.1.5 லட்சம் கடனாளி ஆக்கி விட்டது’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.14.3 லட்சம் கோடி கடன் வாங்கப் போவதாக நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது. ஏன் இந்த கடன்? நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை 67 ஆண்டுகளில் நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு அதை ரூ.205 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் இருக்கிறது. இவ்வளவு கடனையும் தேசத்தின் எந்த துறையை கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்டது? வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறதா? விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கி விட்டார்களா? பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு புதுப்பொலிவு கொடுத்தார்களா? பொதுத்துறை பலப்படுத்தப்பட்டுள்ளதா? பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதா? இதில் எதுவுமே நடக்கவில்லை. அதற்கு பதிலாக, பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் சீர்குலைந்துள்ளன. சிறு, நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அரசு கடன் வாங்கிய பணம் எங்கே போனது? யாருக்கு செலவு செய்யப்பட்டது?

பெரும் கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடிக்குதான் இந்த கடன் தொகை ஈடுகட்டப்பட்டதா? கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி சுமைகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, அவர்களை கடனில் மூழ்கடித்துள்ளது பாஜ அரசு. தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்த பிறகு, நீதித்துறைக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தங்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் போது, நீதித்துறையை விமர்சிப்பது, வலுவான சுதந்திரமான நீதித்துறையை மோடி அரசு அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செஞ்சீங்க? ஒவ்வொருவரையும் ரூ.1.5 லட்சம் கடனாளி ஆக்கியது பாஜ அரசு: பிரியங்கா விளாசல் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Priyanka Vlasal ,New Delhi ,Congress ,general secretary ,Priyanka Gandhi ,Union BJP government ,Congress General Secretary ,Priyanka ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...