×

மத அடிப்படையில் நாட்டை துண்டாட நினைக்கும் பாஜ பாவிகளின் மண்ணாக தமிழ்நாடு எப்போதும் மாறாது: திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது; சேலம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சேலம்: தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும். நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.. பாவிகளின் மண்ணாக, மாறவே மாறாது. தி.மு.க. இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பா.ஜவுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது” என்று பேசிவிட்டுச் சென்றார். மோடி அவர்களே, உண்மையில் உங்களால் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா?

பத்தாண்டுகால பா.ஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினீர்களே, அந்த சாமானிய மக்கள், தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். சிலிண்டர் விலையை உயர்த்தினீர்களே, தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். தொழிலாளர் விரோத சட்டங்களால் பாட்டாளி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள் சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். இப்படி, பத்தாண்டுகால பா.ஜ ஆட்சியில் ஒட்டுமொத்த நாடுமே தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது. இப்படி நாட்டின் அமைதியையும் மக்களின் நிம்மதியையும் கெடுத்த பா.ஜ.க. ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தைத் தொலைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அதுதான் பிரதமர் மோடிக்கு ஒன்றிய உளவுத்துறை கொடுத்திருக்கும் “ரிப்போர்ட்” என்று ஒரு செய்தி வருகிறது. அந்தச் செய்தி என்ன? ”தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதுதான் நிலைமையாக இருந்தது. தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலைமையாக இருக்கிறது” என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்.

பதட்டத்தில் என்ன என்ன செய்கிறார்? ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும், டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், கைது செய்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார். ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எதற்கும் பதில் இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள்.

பெண் சக்தியைப் பற்றி சேலத்தில் பேசியிருந்தார். உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன?. பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க. ஆட்சிதான். பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க. ஆட்சியில்தான். குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான். மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே, அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான்.

ஜம்மு காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே? அதுமட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தையை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே? பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே? அதுவும் பா.ஜ.க. ஆட்சியில்தான்.

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா? வருத்தப்படுகிறேன் என்று பெயரளவுக்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த லட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களுக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம் என்று பேசியிருக்கிறார். பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது! இங்கு எல்லோரும் சமத்துவமாக, சகோதரர்களாக, ஒற்றுமையாக இருக்கிறோம். அமைதியாக வாழும் தமிழ்நாட்டு மக்களை, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரித்து, குளிர்காயலாம் என்று நினைக்கும் ஒரே கட்சி பா.ஜ.க.தான்!

இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இன்னும் நூறு தேர்தல்கள் நடந்தாலும் உங்கள் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும். நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.க. பாவிகளின் மண்ணாக, மாறவே மாறாது. நான் இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். இங்கு தி.மு.க. இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த ராமதாஸ், அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லும் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.விடம் சரண்டர் ஆகியிருக்கிறார்.

ராமதாஸ் இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார்? பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வலிமையான கட்சியாக இருக்கிறது. அதனால், பா.ஜ.க.வுக்கு அழுத்தம் தந்து சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறார். ஆனால், பா.ம.க. கடந்த 3 தேர்தலாக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறது. உழவர்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து வாக்களித்த பா.ம.க. ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?அதனால்தான், இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவர்கள் கட்சிக்காரர்களே மனம் நொந்து, அவமானத்தில் தலைகுனிந்து இருக்கிறார்கள்.

இன்று காலை நாளேடுகளில் மோடி பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது. தன்னுடைய தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். நேற்று மாலையில் இதைப் பேசிய அவர், காலையில் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? “அகில இந்திய வானொலி” என்ற தமிழ்ப் பெயரை ”ஆகாசவாணி” என்று இந்திப் பெயருக்கு மாற்றி உத்தரவு போட்டிருக்கிறார். “எங்கும் இந்தி – எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலை பார்த்துவிட்டு மாலையில் கண்ணீர் வடிக்கிறார். இதற்குத்தான் சொல்வது, மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொருப் பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி சீரழித்த தமிழ்நாட்டை மீட்டுக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒட்டுமொத்த இந்திய மக்களும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள்.

* `பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’
‘தமிழ்நாட்டில் பரிதாபமாக இருக்கிறது பா.ஜ. ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா? “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று. அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் – கவர்னர், சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post மத அடிப்படையில் நாட்டை துண்டாட நினைக்கும் பாஜ பாவிகளின் மண்ணாக தமிழ்நாடு எப்போதும் மாறாது: திமுக இருக்கும் வரை மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது; சேலம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,DMK ,Modi Mastan ,Chief Minister ,M. K. Stalin ,Salem ,M.K.Stalin ,Salem District ,M.K.Stal ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...