×

திருக்கனூர் அருகே கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது

*கஞ்சா, கத்தி, பைக் பறிமுதல்

திருக்கனூர் : கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்று வந்த சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 250 கிராம், கத்தி, பைக் ஆகியவற்றை கைப்பற்றினர்.
புதுச்சேரி திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்துடன் 4 பேர், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் சின்ன அம்மணக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் (எ) குமார் (21), மதுரப்பாக்கம் களத்துமேட்டு தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (எ) சுண்டு (19), திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு வாய்க்கால் கரைபாதையை சேர்ந்த மேற்கு சிவா (21), திருக்கனூர் அடுத்த செல்லிப்பட்டு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (20), மேலும் ஒரு சிறுவன் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கூனிச்சம்பட்டு வாய்க்கால் கரை மேற்கு பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததும் தெரியவந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கனூர் அருகே கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukanur ,Tirukanur ,Puducherry ,Inspector ,Rajkumar ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு