×

நான் என்ன 3வது மனுசன் காலிலா விழுந்தேன்: சசிகலா காலில் விழுந்தது ஒன்னும் தப்பில்லையே? எடப்பாடி ‘ஓபன் டாக்’

மதுரை கே.கே.நகரில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனின் தேர்தல் அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜவுடன் கூட்டணியில் இருந்தோம். அந்த கூட்டணியில் இருந்து தற்போது வெளியேறி விட்டோம். பாஜ தவறு செய்தால் நாங்கள் தட்டிக் கேட்போம். கூட்டணியில் இருக்கும்போது, சக கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம். கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகள் வருமாறு:
அதிமுக தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வர்.
தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறாரே?
அது அவருடைய சொந்த பிரச்னை. இதுகுறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க்கலாம். இங்கு அனைவரும் சமமாகத்தான் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து 5 பன்னீர்செல்வங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனரே?
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள் தான். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டது ஏன்?
அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது, 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.
சசிகலா காலில் விழுந்தது ஏன்?
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே. நான் என்ன 3வது மனுசன் காலிலா விழுந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அதிமுக வேட்பாளர் ‘ஒரு நல்ல மாடு’: விஜயபாஸ்கர் ‘காமெடி’
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில்,‘அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் சிவகங்கை மாவட்ட வடமாடு சங்க தலைவராக உள்ளார். அவர் ஒரு நல்ல விளையாட்டு மாடு. களத்தில் சுற்றி சுற்றி வரக்கூடிய சுத்து மாடு. இளவட்ட மாடு.
எதிர்த்து நிற்கக்கூடிய பாஜ வேட்பாளருக்கு ஜல்லிக்கட்டு காளையின் கயிற்றை கட்ட தெரியுமா. தேர்தல் ஒரு ஜல்லிக்கட்டு களம். காளை கொம்பால் வீரர்களை தூக்கி வீசுவது போல், அதிமுக வேட்பாளர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை வீசி எறிந்து வெற்றி பெறுவார்,’ என்று நகைச்சுவையுடன் பேசினார்.

The post நான் என்ன 3வது மனுசன் காலிலா விழுந்தேன்: சசிகலா காலில் விழுந்தது ஒன்னும் தப்பில்லையே? எடப்பாடி ‘ஓபன் டாக்’ appeared first on Dinakaran.

Tags : Calilla ,Sasikala ,Madurai K. K. Akkatsi ,General ,Edapadi Palanisami ,Dr ,Saravanan ,EDAPPADI PALANISAMI ,ADAMUKA ALLIANCE ,Galila ,Edappadi ,Dinakaran ,
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!