×

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் குறித்து பொதுப் பார்வையாளர் ஆய்வு

திருவள்ளூர், மார்ச் 28: திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர், ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாச பெருமாள், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், செங்குன்றம் துணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான் பங்கேற்றார்.

கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமல்படுத்திய பிறகு பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றுவதற்கு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர்களின் பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள மொத்த காவல் நிலையங்கள் எண்ணிக்கை குறித்தும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களால் போதுமான ஆதாரமின்றி கொண்டு செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும், கைப்பற்றப்பட்ட பொருட்களை விடுவித்தல் குறித்தும், பதட்டமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை குறித்தும், கட்டுப்பாட்டு மையங்களின் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மேற்கொண்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,இராஜ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செலவின பார்வையாளர்கள் ஆலோசனை
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளின் ஒன்றிய செலவின பார்வையாளர் லோகேஷ் தாமூர், பூந்தமல்லி ஆவடி மாதவரம் ஆகிய தொகுதிகளின் ஒன்றிய செலவின பார்வையாளர் சஞ்சய் பகத், மதுரவயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளின் ஒன்றிய செலவின பார்வையாளர் சந்தோஷ் சரண் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் பெரும்புதூர் நாடாளுமன்ற செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர்களின் பணிகள், செயல்பாடுகள் குறித்தும், தொய்வின்றி நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பாக நடத்திட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து ஒன்றிய தேர்தல் செலவின பார்வையாளர்கள் கேட்டறிந்தனர். இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, உதவி பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்ய பிரசாத், உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், தனி துணை கலெக்டர் (நிலம்) செல்வமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் குறித்து பொதுப் பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur (Separate ,Thiruvallur ,Parliamentary ,Separate ,General ,Observer ,Abu Imran ,Tiruvallur ,
× RELATED திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சி...