×

குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு

திண்டுக்கல் : குஜிலியம்பாறை அருகே வரலாற்று ஆய்வாளர்கள் 5,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்ன கல்வட்ட கல்பதுகையை கண்டறிந்துள்ளனர்.
திண்டுக்கல் வரலாற்று குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி, வரலாற்று மாணவர்கள் ரத்தினமுரளிதர், ஹரி பிரசாத், மோகன் திருமலை ஆகியோர் கொண்ட குழுவினர் குஜிலியம்பாறை அருகேயுள்ள மோளப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்ன கல்வட்டம் கல்பதுகையை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:பெருங்கற்காலத்தில் மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் இறந்தவர்களை பெரிய சீரற்ற கற்களை வட்டமாக வைத்து, அதன் நடுவில் செவ்வக வடிவில் பலகை கற்களை ஊன்றி வைத்து அதனுள் இறந்தவர்களை புதைப்பது வழக்கம். இச்செவ்வக வடிவ பலகை கல் பெட்டி போல் இருக்கும். இது கல்பதுகை எனப்படும். ஊன்றப்பட்ட ஒரு பலகை கல்லின் மேல்புறம் சிறிய வட்ட துளை இருக்கும். இது மறுபிறப்பு கொள்கை அடிப்படையிலானது. இப்பெட்டியினுள் இறந்தவர் பயன்படுத்திய மண் சட்டிகள், எலும்பாலான ஆயுதங்கள், மேலும் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்து அதன் மேல் பலகை கல்லை வைத்து மூடிடுவர்.

இம்முறையே பின்னாட்களில் முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கம் ஏற்பட்டது. குஜிலியம்பாறையின் கிழக்கே மோளப்பட்டி செல்லும் வழியில் குருடன் பாறை அடிவார பகுதியில் எந்த சேதமும் இன்றி 4 கல்வட்டங்கள் உள்ளது. அதில் மூடப்படும் பலகை கல் மட்டும் இல்லை. இதில் ஒரு கல்வட்டம் அரிதாக மூன்று கல்வட்ட அடுக்கு முறையும், இதன் விட்டம் 20 அடி நீளம் கொண்டது. இதில் இரு பதுகையும் உள்ளது. ஒரு பதுகை 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டதுடன் அதனை ஒட்டி சற்று குறைந்த நீள அகலத்துடனும் இரு பதுகைகள் உள்ளன. இவ்விடம் அடக்கம் செய்யப்பட்டவர் இப்பகுதி கற்கால மனிதர் கால குழு தலைவராக இருப்பார்.

அதையொட்டியுள்ள பதுகையில் அவர் மனைவி அல்லது அவரது மகன் பதுகையாக இருக்கும். மற்ற மூன்று கல்வட்டங்களில் ஒவ்வொரு கல்வட்டத்திலும் ஒவ்வொரு பதுகை உள்ளது. மேல் பலகை கல் இல்லை கல்வட்டமும், பதுகையும் எந்த சேதமுமின்றி உள்ளது. இக்கல்வட்டங்கள் எண்ணியலை குறிக்கின்றனவா அல்லது வெயில், மழை பனிக்காலங்களில் சூரியனின் நிலைகளை குறிக்கின்றனவா என்ற ஆய்வு முடிவுகள் தெரியவில்லை.

ஆனால் இங்கிலாந்து, போர்ச்சுக்கல், எகிப்து நாடுகளில் நெடுங்கல் வட்டங்கள் சூரியனை மையமாக கொண்டு அதன் நிழல் கொண்டு கணக்கியல் செய்தனர். அந்த நாடுகளின் நெடுங்கல் வட்டத்திற்கு முன்னோடியே நம் தமிழ்நாட்டு பெருங்கற்கால ஈம சின்ன கல்வட்டங்கள். இம்மலையை சுற்றிய இடங்களில் கல் ஆயுதங்கள் பல சிதறி கிடக்கின்றன. மேலும் இங்கு கற்காலத்தில் மனிதர் வாழ்ந்த தொல்லியல் தடங்கள் பல உள்ளன.இவ்வாறு கூறினர்.

The post குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Dindigul History Group ,Viswanathadas ,Chandrasekhar ,Uma Maheswaran ,Perumalsamy ,Rathinamuralidhar ,Hari Prasad ,Mohan ,
× RELATED குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி