×

பங்குனி மாத செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் பங்குனி மாத செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று சுமார் 3 நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தொடர்ச்சியாக 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பங்குனி மாதம் செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால், பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் தூரம் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுகுறித்து, பக்தர்கள் தெரிவிக்கையில்; கோயிலின் வெளியே நீண்ட நேரம் கடும் வெயிலில் வரிசையில் நிற்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய முறையில் இல்லாததால் பக்தர்கள் மிகவும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே, கோயில் நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

The post பங்குனி மாத செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan Temple ,Panguni ,Periyapalayam ,Sami ,Balasubramanya Swamy Temple ,Siruvapuri ,Periyapalayam, Tiruvallur District ,
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...